வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

புதிய அகம்... புத்த(அ)கம்


"லோகோ பின்ன ருசி:இந்த உலகம் பலவிதமான ரசனைகளால் ஆனது. புத்தக வாசிப்பும் அப்படியே. அவ்வகையில் பொழுது போக்க புரட்டிய புத்தகங்களும் உண்டு.என்னைப் புரட்டிய புத்தகங்களுமுண்டு.மொழி ஆளுமை,அனுபவம்,ஞானம் கொண்டு சமைக்கப்பெற்ற புத்தக பதார்த்தத்தை, தேடல் ருசி கொண்டோருக்குப் பரிமாருகிறேன்.

ஞானம் பிறந்த கதை...
பட்டினத்தாரின் வாழ்வை சுய சரித நடையில் அனுபவ ஞானி கண்ணதாசன் எழுதியது. கனத்த வாசிப்பனுபவம் தருவது.

ஞானபூமி...
பாண்டிச்சேரி என்றறியப்படும் புதுவை,எண்ணற்ற மெய் ஞானியரின் மெய்யை(ஜீவ சமாதி)தன்னுள் கொண்ட ஆன்ம நிலம்.எந்த சித்தர், எங்கு ஜீவ சமாதியானார் எனும் அரிய தகவல் தரும் மெய் ஏடு.

ஒரு யோகியின் சுயசரிதம்...
மகாவதார் பாபாஜி,க்ரியா யோகம், மற்றும் பல்வேறு ஞானியர் குறித்த அரிய தகவல்கள் உள்ளடக்கிய ஞானக் களஞ்சியம்.

மிர்தாதின் புத்தகம்...
மிகைல் நைமி வழி வந்த புதிர் நெசவு. விழி எனும் நாவிற்கு தீராத் தா(க்)கத்தை ஏற்படுத்தும்.

ஞானகுரு...
விகடன் வெளியீடு. ஞானத்தையும்,குருவையும் பாசாங்கற்ற மந்திரச் சொற்களால் எஸ்.முருகேசன் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

அன்பெனும் ஓடையிலே...
ஓஷோ எனும் பிரபஞ்சக் கவிதையின் சில வரிகள்...நமக்காக...

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்...

ஞானியரின் ஞானி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர். ..ம- என்ற நேரடிச் சீடரின் பேறு பெற்ற கணங்கள்...பரவசப் பதிவுகள். படிக்கையில் வீடு காண்போம்.

சனி, மே 14, 2011

பொதிகை மலை....

பொதிகை மலை....
பொதிகை மலை பற்றி பல சுவாரஸ்யமான, அமானுஷ்யமான தகவல்கள் கேள்விப்பட்டதும் அங்கு செல்லத் துடித்தோம்.
பொதிகை மலை பயணத்திற்கு தமிழக வனப்பகுதி (அம்பாசமுத்திரம்-பாபநாசம்) கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதி மறுப்பதை அறிந்து, (கேரளா) திருவனந்தபுர வனத் துறையினரின் சிறப்பு அனுமதியில் முப்பது நபர்கள் அடங்கிய குழுவாக யாத்திரையை துவக்கினோம். மற்றவர்கள் இந்த பயணத்தில்தான் பழக்கம். நான்கு உள்ளூர் இளைஞர்கள் எங்கள் வழிகாட்டியாக உடன் வர, சுமார் இருபது கி.மீ. தூர காட்டு வழி பயணத்தை தொடங்கினோம். ஆரம்பமே திகிலூட்டியது. நண்பகல் நேரம், மாலை வேளை போல் உணர்ந்தோம். அடர்ந்த வனப்பகுதி. உடன் வந்தவர்களில் சிலருக்கு காலிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்து அதிர்ந்தோம். எங்கள் வழிகாட்டி சொல்லித்தான் தெரிந்தது, காட்டு அட்டைகள்தான் காரணமென்று. அட்டைப் பூச்சிகள் காலில் ஒட்டுவதும் தெரியாது. இரத்தம் உறிகையில் வலியும் தெரியாது. மிக கவனமாக இருந்தும் ஒவ்வொருவருமே ஓரிரண்டு தடவையாவது அட்டை பூச்சிகளுக்கு இரத்த தானம் செய்தோம். கண்டிராத விருட்சங்கள், கேட்டிராத பல்லுயிர் ஒலிகள், இதுவரை அனுபவிக்காத தென்றல் என அப்பிரதேசமே இது “வனம், வனம் “ என்றது. அதே நேரம் அவ்விடம் யானைகள்,மற்றும் புலிகளின் வசிப்பிடம் என்பது ஆரம்பத்திலேயே அறிவுறுத்தப்பட்டு, அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்ற வனத் துறையினர் அறிவுரை, மனது எங்கும், எதிலும் “கவனம், கவனம்” என்றது. எனினும் பல்லாயிரம் மரங்கள், அருவிகள், ஓடைகள், என இயற்கையின் பிரம்மாண்டத்தில் கரைந்தோம். சற்று நடந்தவுடன் தென்பட்ட அருவியில் ஆனந்தக் குளியல் போட்டோம். உண்டோம்.நடந்தோம், மீண்டும் ஓர் அருவியில் குளித்தோம். ஐந்து மணி நேர நடையில், நடுக் காட்டில் அகத்தியர் கூடம் எனும் இடத்தை அடைந்து இளைப்பாறினோம்.
அங்கிருந்து பொதிகை மலையின் முழு அழகை தரிசிக்கலாம். மலை என்ற வார்த்தையின் இன்னொரு பொருள் திகைப்பு. அப்படித்தான் மலைத்துப் போனோம். பொதிகை மலையைப் பார்த்து.மலை உச்சியை வெண் பஞ்சு மேகங்கள் தழுவுவதும், பின்பு நழுவுவதுமாய் இயற்கையின் காதல் விளையாட்டு கண்டோம். பொதிகை, தாமிரவருணி ஆற்றின் தாய் மடி. இங்கு வந்தால் பறந்திடும் நோய்,நொடி. பொதிகையை கண்களால் விழுங்கி கொண்டேயிருந்தோம். இரவு கடந்தது. தங்கினோம், தூங்கினோம்.
மறுநாள் காலை ஏழு மணிக்கு மீண்டும் நடக்கத் துவங்கினோம். அடர் மூங்கில் வனம். யானைகளின் இருப்பை அவற்றின் கழிவுகளை வழியெங்கும் பார்த்தும் நாங்கள் அஞ்சவில்லை, இறை எனும் இயற்கையிடம் எங்களை முழுமையாய் ஒப்படைத்ததால்.பிறகு சர்ப வனம். (அட,பாம்பு காடுங்க). மூன்று மணி நேர நடை. பொதிகையின் உச்சிக்கு செல்வது மிக சிரமம். உச்சத்தை தொட, உதவி, ஆர்வம்,சாகசம் ,நம்பிக்கை, மரண பயம், என கலந்து கட்டி வரும் உணர்வுகளுடன், செயல்களுடன்தான் எவரும் சிகரத்தினை அடைய முடியும். தரையின் வாழ்விலக்கணமே மலையிலும்.
பொதிகை மலை உச்சி. அகத்தியர் இருக்கிறார். இறை எனும் இயற்கை தன் பெரும் கருணையினால் நமை இன்னும் வாழ வைக்கிறது.அகத்தே இயல்பாய் இருப்போம். அகத்தே இயல்பாய் இருத்தலே அகத்தியம்.




புதன், ஏப்ரல் 06, 2011

பாலகுமாரன்


பாலகுமாரன்
தமிழ் வாசகர்களால் மிக நேசிக்கப்படும் பாலகுமாரன், காதல், சமூக கதைகள், கட்டுரைகள் தாண்டி ஆன்மிகம் எனும் பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கையில், அவர் படைத்த சில ஆன்மிக கதைகள் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படுகின்றன. அவற்றுள் எனக்கு மிகப் பிடித்த சில படைப்புகளை இங்கு தருகிறேன். படியுங்கள். பகிருங்கள்.

காதற்பெருமான்- திருவண்ணாமலை ஞானி அருணகிரி நாதரின் வாழ்வை மிக அழகாய் சொல்லும் புதினம்.
பேய்க்கரும்பு –பட்டினத்தார் எனும் சித்தரின் வரலாற்றை அறிய அவசியம் படிக்க வேண்டும்.
தோழன்- புன்னை நல்லூர் மாரியம்மன் எனும் மகா சக்தியின் திரு உருவை புற்று மண் கொண்டு உருவாக்கி பல அதிசயம் நிகழ்த்திய மகான் சதாசிவ பரப் பிரமேந்திரர் சரிதம்.
கடவுள் வீடு- தருமரின் பிறப்பின் சூட்சுமத்தை மகாபாரதப் பின்னணியில் விளக்கும் விறுவிறுப்பான நீள் கதை.
என் கண்மணி தாமரை- அபிராமி அந்தாதி இயற்றி பக்தியின், சரணாகதியின், மகத்துவத்தை உலகறியச் செய்த பக்தன், முக்தன் அபிராமி பட்டர் கதை.
புருஷவதம்- பழையனூர் நீலி கதை. புகழ் போதைக்கு அடிமையாகி அதற்கு விலையாக தன் சொந்த மனைவியின் கையால் மரணம் அடையும் மனிதனின் அவலத்தை ஒவ்வொரு வரியிலும், திகிலும், திருப்பமும் கலந்து சொல்லும் சுவாரஸ்யமான நெடுங்கதை.
பெரிய புராண கதைகள்- அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிலரின் (உதாரணமாக காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார் மற்றும் இன்ன பிறர்) வாழ்வியல் சம்பவங்களை விளக்கி, எப்படி அவர்கள் இறை எனும் சிவன் அருள் பெற்று, நாயன் மாராய் உயர்ந்தனர் என்பதை, பரவசத்துடன் கூறும் வார்த்தைப் புதையல்.
இன்னும் சில நாவல்கள் இவ்வரிசையில் உள்ளன. பிறகு பகிர்கிறேன்.

திங்கள், ஏப்ரல் 04, 2011

அபிராமி! அபிராமி!!





திருக்கடவூர் அபிராமி அம்மனை தரிசிக்கையில் உள்ளே ஒரு வினா ஓடியது. அதுவும் அவள் குறித்தே. அபிராமி பட்டர் நிறைந்த அமாவாசையன்று பௌர்ணமி நிலா தோன்றும் என சொன்னதும், அபிராமியும் முழு நிலவை வானில் தோன்றச் செய்தாள் என்ற கதையும் நினைவுக்கு வந்தது. எப்போதும் இயற்கை எனும் இறை எவருக்கும் எந்நிலையிலும் இயற்கைக்கு மாறாக அதுவும் தன் இருப்பை நிரூபிக்க அற்புதம் நிகழ்துவதில்லையே, எனவே அவளையே கேட்போம் அன்று அவள் முன்பமர்ந்து தியானிக்கையில் உள்ளே ஓர் வாக்கியம் ஓடியது. பௌர்ணமி என்றால் முழுமதி எனப் பொருள் கொள்.முழு மதி அதாவது பூரண அறிவு அபிராமி பட்டருக்குள் பூரித்ததும் அவரின் இருப்பும் தன்மையும் எதிரிலிருப்போர் உணர்ந்து அவரை முழுதாய் மதித்தனர். முழுமதி பூத்தது அவரில்.

செவ்வாய், மார்ச் 29, 2011

சப்த கன்னியர்


சப்த மாதர் எனும் சப்த கன்னியர்

ஆதி சக்தி தன்னிலிருந்து ஏழு சிறப்பான தன்னிகரற்ற தூய கன்னி சக்திகளை காலம் கருதி தோற்றுவித்தது.
பிராம்ஹி,மகேஸ்வரி,கௌமாரி,வைஷ்ணவி,வாராஹி,இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும்.
நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர். இவர்களை தனி ஆலயத்தில் தரிசிக்க நாம் புதுவை செல்ல வேண்டும்.
பாண்டிச்சேரி எனும் புதுவை மாநிலத்தில் சன்யாசிகுப்பம் என்கிற கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சப்த மாதர் எனும் சப்த கன்னியர்க்கான ஆலயம் உள்ளது. அழகான கோவில். சத்தியமான அதிர்வுகள் கொண்ட அற்புத ஆலயம்.
கன்னிகள் ஏழு பேர் என்று ஒரு சுவாரஸ்யமான நாவலாக
இந்திரா சௌந்தரராஜன் எழுதி உள்ளார். அவசியம் படியுங்கள்.

இயற்கையின் மடியில்.....


இயற்கையின் மடியில்.....
தப்கூலி
ஓசூரிலிருந்து 80 கிலோமீட்டர்.தளி சென்று அங்கிருந்து ஜவளகிரி சென்றோம். அழகான மலைப் பாதையில் ஆயிரக் கணக்கில் வண்ணத்துப் பூச்சிகளின் அணிவகுப்பை ரசித்தபடி தென்றல் காற்று நமைத் தழுவ கலகொண்டப்பள்ளி சென்று பின் ஹுன்ஸுன ஹள்ளி சென்றோம். அங்கே மட்டுமே கடைகள் உண்டென்பதால் நொறுக்கு தீனிகள் வாங்கிக் கொண்டு மஞ்சுகொண்டப் பள்ளி சென்றோம். 7கி.மீ மண் பாதை மட்டுமே,மிக கவனமாக செல்ல வேண்டிய மலைப் பாதையும் கூட.
ஒகேனக்கலில் கலக்கும் காவிரி, இது தமிழகப் பகுதிதான்.

அற்புதமான சூழலில் எவரின் இடையூறின்றி பயமின்றி காலத்தை மறந்து மூழ்கி மிதந்து குளித்து விளையாடலாம். குடும்பத்துடனும் செல்லலாம். அமானுஷ்யமான கட்டிடத்தை அதன் கதையை அங்கு இருக்கும் சிவன் காளையர் கோவில் நிர்வாகிகள் சொல்ல கேட்டு பார்த்து பிரமித்தோம். நேரில் சென்று பார்த்தால் மட்டுமே புரியும்.
ஒரு வேண்டுகோள் ...அசுத்தப்படாத காவிரி, நாமும் அப்படி நடந்து கொள்வோம்.
ஒரு எச்சரிக்கை?! யானைகள் நடமாடும் பகுதி என்பதால் மாலை 3 மணிக்கே அங்கிருந்து விடை பெறுங்கள்...

பஞ்சப்பள்ளி அணை



பஞ்சப்பள்ளி அணை
ஓசூரிலிருந்து 45 கிமீ தூரம்தான். தேன்கனிக்கோட்டை சென்று , அங்கிருந்து ஓர் ஒற்றை தார் சாலையில் சுமார் ஒரு மணி நேர பயணத்தில் அணையை அடையலாம். மலைகள் சூழ மிக அழகாய் உள்ளது.செல்லும் வழியில் சுமார் இரண்டு கிமீ முன்பே அணையின் நீர் இருப்பை பள்ளத்தாக்கில் ஓடும் ஆறு தெரிவிக்கிறது. பூங்கா போன்றவை இல்லை. எனினும் குளிர்ச்சியான மாந்தோப்பும், தெளிந்த நீரோடும் நீண்ட கால்வாயும் போதும் இளைப்பாற.

ஞாயிறு, மார்ச் 27, 2011

மேலகிரி ஐயப்பன்


மேலகிரி ஐயப்பன்
ஓசூரிலிருந்து சுமார் நாற்பது கி.மீ தொலைவு. தேன்கனிக் கோட்டை, பின் அய்யூர் செல்லும் பாதையில் சென்று நமிலேரி எனும் ஊரில் இடது புற சாலையில் சென்றால் அரை மணி நேரத்தில் கூசுவாடி மலை அடிவாரத்தை அடையலாம். அங்கிருந்து சுமார் இரண்டரை மணி நேர பயணத்தில் மலை உச்சியை அடையலாம். அற்புதமான மூங்கில் காடு. சற்று திகில் பயணம்தான். உடன் வந்த மலைவாசிகள் பத்து வார்த்தைகள் பேசினால் எட்டு வார்த்தை யானை பற்றி இருந்தது.
நிஜ சபரிமலை பார்க்காத திரு.கோபால் (நமிலேரி) முறையாக பூஜை செய்கிறார். சுற்றி உள்ள ஊர் மக்கள் மகர ஜோதி அன்று இந்த மலைக்கு இருமுடி தாங்கி வருவது ஓர் அனந்த அனுபவம்.
தொடர்புக்கு. திரு.கோபால் 9626294557

நூரோந்து சாமிமலை


நூரோந்து சாமிமலை
ஓசூரில் இருந்து அஞ்செட்டி சென்று உரிகம் சாலையில் தக்கட்டி எனுமிடத்தில் பிரிந்து மலை பாதையில் சென்றால் நூரோந்து சாமிமலை செல்லலாம். சிறிய குகை கோவில். இங்கு உள்ள சிவன் ஒரு சித்தரால் வழிபடபட்டதாகும்.
இங்குதான் அந்த அதிசயத்தை நம் கண்களால் பார்த்து பரவசமடைந்தோம். விளக்கு ஏற்ற எண்ணைக்கு பதில் வெறும் இளநீர் தண்ணீர் உபயோகப் படுத்தி தீபம் ஏற்ற ஆச்சர்யமாக இருந்தது.
நீங்களும் வாங்க. அற்புதைதைப் பாருங்க.

ஓசூர்


பெட்டமுகிலாலம்.. எளிமையின் அழகு!
கொஞ்சம் தேநீர் நிறைய வா(வ)னம்
ஒசூரின் ஏற்காடு. தேன்கனிகோட்டையிலிருந்து முப்பது கி.மீ தூரம். அய்யூர் வன பகுதியில் உள்ளது சாமி ஏரி. அழகான ஏரி. அதிர்ஷ்டம் இருந்தால் யானைகள் நீர் குடிப்பதை பார்க்கலாம். இரு புறமும் மூங்கில் வனம்.
வெறுமனே இயற்கையை அதன் பிரமாண்டத்திற்கு ரசிப்பவர்களா, அவசியம் செல்லுங்கள் பெட்டமுகிளலம்.