இருளொளி
இருளே ஒளி!
வெள்ளி, அக்டோபர் 25, 2013
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
அரங்கா! அரங்கா! இவ்வுலகே உந்தன் மாய அரங்கா!!!
...சரியாக பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் குடந்தையில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் நின்ற கோலத்தில் அருளும் ஒப்பிலியப்பனை தரிசிக்கையில் என்னுள் ஒரு பரவசம் கிளர்ந்ததைத்தான் என் ஆன்மீகப் பயணத்தின் முதற் தடமாய் கூறுவேன். இருந்தபோதிலும், பாம்பணை மீது துயிலும் பரமன் ஏனோ எனை ஈர்க்கின்றான். சில பாடல்கள் நான் மனனம் செய்திருக்கின்றேன். ஆயின் சில பாடல்களில்தான் நான் ஜனனம் அடைகிறேன். அதில் ஒன்று..
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!!!
என் புற,அகக் கண்களின் நாவிற்கு அரங்கனின் சயன கோலங்களின் சுவை பிடித்துப் போனதால், என் சுவையை உங்களுடன் பகர்கிறேன்.
திருமழிசை ஆழ்வார். சாரங்கா!!! சாரங்கா!!!
... மீண்டும் அதே குடந்தை. சாதாரத் தெருவில் உள்ளது திருமழிசை ஆழ்வார் சன்னதி எனும் அத்துணை ஆழ்வார்களின் கருப்பை. அது இருஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் ஆன்ம அதிர்வுகள் கொண்டு சொல்கிறது திருமழிசை பிரானின் இருப்பை. முதலில் அவர் சன்னதியில் அவரை தியானித்து, வணங்கினேன்.
இறையை அடைய எத்துணை வழிகள் உண்டோ அத்துணை வழிகளிலும் முயன்றவர் திருமழிசை, அவை அனைத்தும் அத் துணை வழிகள்தான் என்றுணர்ந்தது அரங்கனிடம். அந்த அரங்கனின் இடங்களில் ஒன்றுதான் சாரங்கபாணி திருக் கோவில். தன் பரம பக்தன் தனை வணங்க வருவது கண்டு நீள் துயில் கொண்டோன் சற்றே எழுந்த நிலையில் அருளும் அழகில்தான் நான் கரைகிறேன். கோவிலுள் இருக்கும் கல் தேரின் சிற்பத் திறமையை வியப்பதா, இல்லை பதி தாண்டா பத்தினியாய் மணவாளனை தன் முந்தானையில் முடிந்து எப்போதும் முதல் மரியாதை பெறும் ராதாவை, கோமள வள்ளியை வியப்பதா என நான் வியந்தேன். மிகச் சுத்தமாய் பராமரிக்கப்படும் பெரும் கோயில். மிக மிக அழகான அரங்கன்.. இல்லையில்லை, சாரங்கன்.
ரங்கனைத் தொடர்வோம்...
வெள்ளி, ஏப்ரல் 27, 2012
கொல்லிமலை கோரக்கர் குகை
கொல்லி மலை அறப்பளீஸ்வரர் கோவில் எதிரில் ஆகாய கங்கை அருவிக்குச் செல்லும் வழியில் கீழிறங்கிச் செல்லும்போது அருவிக்கு முன்பே வலது புறம் ஓர் ஒற்றையடிப் பாதை பிரிகிறது.அதில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர பணயம்.. (எழுத்துப் பிழை இல்லைங்க). குழுவாகத்தான் செல்ல முடியும்.வழிகாட்டி துணையின்றி செல்ல முடியாது. இளம் காடு.பல வண்ணச் சருகுகள் காலடியில் மெத்தென்ற தரை விரிப்பைப் போன்று. ஏற்ற இறக்கப் பாதை.. இலக்கின்றி பாயும் காட்டாறு. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தால் முதலில் வருவது, பாம்பாட்டிச் சித்தர் குகை. தரிசித்து விட்டு நடக்கையில் திடீரென தோள்பட்டையில் நெருப்பு துண்டத்தைக் கொட்டியது போல் எரிச்சல்.மரக் கிளைகளில் படர்ந்த கொடியில் இருந்து கொத்துக் கொத்தாய் விழுந்த செந்நிற எறும்புகள்தாம் காரணம் என அறிந்தோம். அவற்றின் பெயரே நெருப்பெறும்பு எனத் தெரிந்ததும் வியப்பு .தளர் நடையிட்டுத் தொடர்ந்தோம். அமானுடச் சூழலில் கோரக்கர் குகை, அருகில் கீழிறங்கிச் சென்று காட்டாற்றில் குளித்தோம். கோடையிலும் குளிர் நீர். எதிரே பிரம்மாண்ட ஒற்றை மலை.சித்தன் போக்கு சிவன் போக்கு என்பர்.இயற்கையுடன் போரிடாது இயைந்து வாழ் சித்தர் திருவடியை நினைந்து ,பணிந்து விடை பெற்றோம்.
வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011
புதிய அகம்... புத்த(அ)கம்
"லோகோ பின்ன ருசி:இந்த உலகம் பலவிதமான ரசனைகளால் ஆனது. புத்தக வாசிப்பும் அப்படியே. அவ்வகையில் பொழுது போக்க புரட்டிய புத்தகங்களும் உண்டு.என்னைப் புரட்டிய புத்தகங்களுமுண்டு.மொழி ஆளுமை,அனுபவம்,ஞானம் கொண்டு சமைக்கப்பெற்ற புத்தக பதார்த்தத்தை, தேடல் ருசி கொண்டோருக்குப் பரிமாருகிறேன்.
ஞானம் பிறந்த கதை...
பட்டினத்தாரின் வாழ்வை சுய சரித நடையில் அனுபவ ஞானி கண்ணதாசன் எழுதியது. கனத்த வாசிப்பனுபவம் தருவது.
ஞானபூமி...
பாண்டிச்சேரி என்றறியப்படும் புதுவை,எண்ணற்ற மெய் ஞானியரின் மெய்யை(ஜீவ சமாதி)தன்னுள் கொண்ட ஆன்ம நிலம்.எந்த சித்தர், எங்கு ஜீவ சமாதியானார் எனும் அரிய தகவல் தரும் மெய் ஏடு.
ஒரு யோகியின் சுயசரிதம்...
மகாவதார் பாபாஜி,க்ரியா யோகம், மற்றும் பல்வேறு ஞானியர் குறித்த அரிய தகவல்கள் உள்ளடக்கிய ஞானக் களஞ்சியம்.
மிர்தாதின் புத்தகம்...
மிகைல் நைமி வழி வந்த புதிர் நெசவு. விழி எனும் நாவிற்கு தீராத் தா(க்)கத்தை ஏற்படுத்தும்.
ஞானகுரு...
விகடன் வெளியீடு. ஞானத்தையும்,குருவையும் பாசாங்கற்ற மந்திரச் சொற்களால் எஸ்.முருகேசன் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
அன்பெனும் ஓடையிலே...
ஓஷோ எனும் பிரபஞ்சக் கவிதையின் சில வரிகள்...நமக்காக...
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்...
ஞானியரின் ஞானி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர். ..ம- என்ற நேரடிச் சீடரின் பேறு பெற்ற கணங்கள்...பரவசப் பதிவுகள். படிக்கையில் வீடு காண்போம்.
சனி, மே 14, 2011
பொதிகை மலை....
பொதிகை மலை....
பொதிகை மலை பற்றி பல சுவாரஸ்யமான, அமானுஷ்யமான தகவல்கள் கேள்விப்பட்டதும் அங்கு செல்லத் துடித்தோம்.
பொதிகை மலை பயணத்திற்கு தமிழக வனப்பகுதி (அம்பாசமுத்திரம்-பாபநாசம்) கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதி மறுப்பதை அறிந்து, (கேரளா) திருவனந்தபுர வனத் துறையினரின் சிறப்பு அனுமதியில் முப்பது நபர்கள் அடங்கிய குழுவாக யாத்திரையை துவக்கினோம். மற்றவர்கள் இந்த பயணத்தில்தான் பழக்கம். நான்கு உள்ளூர் இளைஞர்கள் எங்கள் வழிகாட்டியாக உடன் வர, சுமார் இருபது கி.மீ. தூர காட்டு வழி பயணத்தை தொடங்கினோம். ஆரம்பமே திகிலூட்டியது. நண்பகல் நேரம், மாலை வேளை போல் உணர்ந்தோம். அடர்ந்த வனப்பகுதி. உடன் வந்தவர்களில் சிலருக்கு காலிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்து அதிர்ந்தோம். எங்கள் வழிகாட்டி சொல்லித்தான் தெரிந்தது, காட்டு அட்டைகள்தான் காரணமென்று. அட்டைப் பூச்சிகள் காலில் ஒட்டுவதும் தெரியாது. இரத்தம் உறிகையில் வலியும் தெரியாது. மிக கவனமாக இருந்தும் ஒவ்வொருவருமே ஓரிரண்டு தடவையாவது அட்டை பூச்சிகளுக்கு இரத்த தானம் செய்தோம். கண்டிராத விருட்சங்கள், கேட்டிராத பல்லுயிர் ஒலிகள், இதுவரை அனுபவிக்காத தென்றல் என அப்பிரதேசமே இது “வனம், வனம் “ என்றது. அதே நேரம் அவ்விடம் யானைகள்,மற்றும் புலிகளின் வசிப்பிடம் என்பது ஆரம்பத்திலேயே அறிவுறுத்தப்பட்டு, அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்ற வனத் துறையினர் அறிவுரை, மனது எங்கும், எதிலும் “கவனம், கவனம்” என்றது. எனினும் பல்லாயிரம் மரங்கள், அருவிகள், ஓடைகள், என இயற்கையின் பிரம்மாண்டத்தில் கரைந்தோம். சற்று நடந்தவுடன் தென்பட்ட அருவியில் ஆனந்தக் குளியல் போட்டோம். உண்டோம்.நடந்தோம், மீண்டும் ஓர் அருவியில் குளித்தோம். ஐந்து மணி நேர நடையில், நடுக் காட்டில் அகத்தியர் கூடம் எனும் இடத்தை அடைந்து இளைப்பாறினோம்.
அங்கிருந்து பொதிகை மலையின் முழு அழகை தரிசிக்கலாம். மலை என்ற வார்த்தையின் இன்னொரு பொருள் திகைப்பு. அப்படித்தான் மலைத்துப் போனோம். பொதிகை மலையைப் பார்த்து.மலை உச்சியை வெண் பஞ்சு மேகங்கள் தழுவுவதும், பின்பு நழுவுவதுமாய் இயற்கையின் காதல் விளையாட்டு கண்டோம். பொதிகை, தாமிரவருணி ஆற்றின் தாய் மடி. இங்கு வந்தால் பறந்திடும் நோய்,நொடி. பொதிகையை கண்களால் விழுங்கி கொண்டேயிருந்தோம். இரவு கடந்தது. தங்கினோம், தூங்கினோம்.
மறுநாள் காலை ஏழு மணிக்கு மீண்டும் நடக்கத் துவங்கினோம். அடர் மூங்கில் வனம். யானைகளின் இருப்பை அவற்றின் கழிவுகளை வழியெங்கும் பார்த்தும் நாங்கள் அஞ்சவில்லை, இறை எனும் இயற்கையிடம் எங்களை முழுமையாய் ஒப்படைத்ததால்.பிறகு சர்ப வனம். (அட,பாம்பு காடுங்க). மூன்று மணி நேர நடை. பொதிகையின் உச்சிக்கு செல்வது மிக சிரமம். உச்சத்தை தொட, உதவி, ஆர்வம்,சாகசம் ,நம்பிக்கை, மரண பயம், என கலந்து கட்டி வரும் உணர்வுகளுடன், செயல்களுடன்தான் எவரும் சிகரத்தினை அடைய முடியும். தரையின் வாழ்விலக்கணமே மலையிலும்.
பொதிகை மலை உச்சி. அகத்தியர் இருக்கிறார். இறை எனும் இயற்கை தன் பெரும் கருணையினால் நமை இன்னும் வாழ வைக்கிறது.அகத்தே இயல்பாய் இருப்போம். அகத்தே இயல்பாய் இருத்தலே அகத்தியம்.
பொதிகை மலை பற்றி பல சுவாரஸ்யமான, அமானுஷ்யமான தகவல்கள் கேள்விப்பட்டதும் அங்கு செல்லத் துடித்தோம்.
பொதிகை மலை பயணத்திற்கு தமிழக வனப்பகுதி (அம்பாசமுத்திரம்-பாபநாசம்) கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதி மறுப்பதை அறிந்து, (கேரளா) திருவனந்தபுர வனத் துறையினரின் சிறப்பு அனுமதியில் முப்பது நபர்கள் அடங்கிய குழுவாக யாத்திரையை துவக்கினோம். மற்றவர்கள் இந்த பயணத்தில்தான் பழக்கம். நான்கு உள்ளூர் இளைஞர்கள் எங்கள் வழிகாட்டியாக உடன் வர, சுமார் இருபது கி.மீ. தூர காட்டு வழி பயணத்தை தொடங்கினோம். ஆரம்பமே திகிலூட்டியது. நண்பகல் நேரம், மாலை வேளை போல் உணர்ந்தோம். அடர்ந்த வனப்பகுதி. உடன் வந்தவர்களில் சிலருக்கு காலிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்து அதிர்ந்தோம். எங்கள் வழிகாட்டி சொல்லித்தான் தெரிந்தது, காட்டு அட்டைகள்தான் காரணமென்று. அட்டைப் பூச்சிகள் காலில் ஒட்டுவதும் தெரியாது. இரத்தம் உறிகையில் வலியும் தெரியாது. மிக கவனமாக இருந்தும் ஒவ்வொருவருமே ஓரிரண்டு தடவையாவது அட்டை பூச்சிகளுக்கு இரத்த தானம் செய்தோம். கண்டிராத விருட்சங்கள், கேட்டிராத பல்லுயிர் ஒலிகள், இதுவரை அனுபவிக்காத தென்றல் என அப்பிரதேசமே இது “வனம், வனம் “ என்றது. அதே நேரம் அவ்விடம் யானைகள்,மற்றும் புலிகளின் வசிப்பிடம் என்பது ஆரம்பத்திலேயே அறிவுறுத்தப்பட்டு, அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்ற வனத் துறையினர் அறிவுரை, மனது எங்கும், எதிலும் “கவனம், கவனம்” என்றது. எனினும் பல்லாயிரம் மரங்கள், அருவிகள், ஓடைகள், என இயற்கையின் பிரம்மாண்டத்தில் கரைந்தோம். சற்று நடந்தவுடன் தென்பட்ட அருவியில் ஆனந்தக் குளியல் போட்டோம். உண்டோம்.நடந்தோம், மீண்டும் ஓர் அருவியில் குளித்தோம். ஐந்து மணி நேர நடையில், நடுக் காட்டில் அகத்தியர் கூடம் எனும் இடத்தை அடைந்து இளைப்பாறினோம்.
அங்கிருந்து பொதிகை மலையின் முழு அழகை தரிசிக்கலாம். மலை என்ற வார்த்தையின் இன்னொரு பொருள் திகைப்பு. அப்படித்தான் மலைத்துப் போனோம். பொதிகை மலையைப் பார்த்து.மலை உச்சியை வெண் பஞ்சு மேகங்கள் தழுவுவதும், பின்பு நழுவுவதுமாய் இயற்கையின் காதல் விளையாட்டு கண்டோம். பொதிகை, தாமிரவருணி ஆற்றின் தாய் மடி. இங்கு வந்தால் பறந்திடும் நோய்,நொடி. பொதிகையை கண்களால் விழுங்கி கொண்டேயிருந்தோம். இரவு கடந்தது. தங்கினோம், தூங்கினோம்.
மறுநாள் காலை ஏழு மணிக்கு மீண்டும் நடக்கத் துவங்கினோம். அடர் மூங்கில் வனம். யானைகளின் இருப்பை அவற்றின் கழிவுகளை வழியெங்கும் பார்த்தும் நாங்கள் அஞ்சவில்லை, இறை எனும் இயற்கையிடம் எங்களை முழுமையாய் ஒப்படைத்ததால்.பிறகு சர்ப வனம். (அட,பாம்பு காடுங்க). மூன்று மணி நேர நடை. பொதிகையின் உச்சிக்கு செல்வது மிக சிரமம். உச்சத்தை தொட, உதவி, ஆர்வம்,சாகசம் ,நம்பிக்கை, மரண பயம், என கலந்து கட்டி வரும் உணர்வுகளுடன், செயல்களுடன்தான் எவரும் சிகரத்தினை அடைய முடியும். தரையின் வாழ்விலக்கணமே மலையிலும்.
பொதிகை மலை உச்சி. அகத்தியர் இருக்கிறார். இறை எனும் இயற்கை தன் பெரும் கருணையினால் நமை இன்னும் வாழ வைக்கிறது.அகத்தே இயல்பாய் இருப்போம். அகத்தே இயல்பாய் இருத்தலே அகத்தியம்.
புதன், ஏப்ரல் 06, 2011
பாலகுமாரன்

பாலகுமாரன்
தமிழ் வாசகர்களால் மிக நேசிக்கப்படும் பாலகுமாரன், காதல், சமூக கதைகள், கட்டுரைகள் தாண்டி ஆன்மிகம் எனும் பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கையில், அவர் படைத்த சில ஆன்மிக கதைகள் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படுகின்றன. அவற்றுள் எனக்கு மிகப் பிடித்த சில படைப்புகளை இங்கு தருகிறேன். படியுங்கள். பகிருங்கள்.
காதற்பெருமான்- திருவண்ணாமலை ஞானி அருணகிரி நாதரின் வாழ்வை மிக அழகாய் சொல்லும் புதினம்.
பேய்க்கரும்பு –பட்டினத்தார் எனும் சித்தரின் வரலாற்றை அறிய அவசியம் படிக்க வேண்டும்.
தோழன்- புன்னை நல்லூர் மாரியம்மன் எனும் மகா சக்தியின் திரு உருவை புற்று மண் கொண்டு உருவாக்கி பல அதிசயம் நிகழ்த்திய மகான் சதாசிவ பரப் பிரமேந்திரர் சரிதம்.
கடவுள் வீடு- தருமரின் பிறப்பின் சூட்சுமத்தை மகாபாரதப் பின்னணியில் விளக்கும் விறுவிறுப்பான நீள் கதை.
என் கண்மணி தாமரை- அபிராமி அந்தாதி இயற்றி பக்தியின், சரணாகதியின், மகத்துவத்தை உலகறியச் செய்த பக்தன், முக்தன் அபிராமி பட்டர் கதை.
புருஷவதம்- பழையனூர் நீலி கதை. புகழ் போதைக்கு அடிமையாகி அதற்கு விலையாக தன் சொந்த மனைவியின் கையால் மரணம் அடையும் மனிதனின் அவலத்தை ஒவ்வொரு வரியிலும், திகிலும், திருப்பமும் கலந்து சொல்லும் சுவாரஸ்யமான நெடுங்கதை.
பெரிய புராண கதைகள்- அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிலரின் (உதாரணமாக காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார் மற்றும் இன்ன பிறர்) வாழ்வியல் சம்பவங்களை விளக்கி, எப்படி அவர்கள் இறை எனும் சிவன் அருள் பெற்று, நாயன் மாராய் உயர்ந்தனர் என்பதை, பரவசத்துடன் கூறும் வார்த்தைப் புதையல்.
இன்னும் சில நாவல்கள் இவ்வரிசையில் உள்ளன. பிறகு பகிர்கிறேன்.
திங்கள், ஏப்ரல் 04, 2011
அபிராமி! அபிராமி!!

திருக்கடவூர் அபிராமி அம்மனை தரிசிக்கையில் உள்ளே ஒரு வினா ஓடியது. அதுவும் அவள் குறித்தே. அபிராமி பட்டர் நிறைந்த அமாவாசையன்று பௌர்ணமி நிலா தோன்றும் என சொன்னதும், அபிராமியும் முழு நிலவை வானில் தோன்றச் செய்தாள் என்ற கதையும் நினைவுக்கு வந்தது. எப்போதும் இயற்கை எனும் இறை எவருக்கும் எந்நிலையிலும் இயற்கைக்கு மாறாக அதுவும் தன் இருப்பை நிரூபிக்க அற்புதம் நிகழ்துவதில்லையே, எனவே அவளையே கேட்போம் அன்று அவள் முன்பமர்ந்து தியானிக்கையில் உள்ளே ஓர் வாக்கியம் ஓடியது. பௌர்ணமி என்றால் முழுமதி எனப் பொருள் கொள்.முழு மதி அதாவது பூரண அறிவு அபிராமி பட்டருக்குள் பூரித்ததும் அவரின் இருப்பும் தன்மையும் எதிரிலிருப்போர் உணர்ந்து அவரை முழுதாய் மதித்தனர். முழுமதி பூத்தது அவரில்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)