செவ்வாய், செப்டம்பர் 11, 2012

அரங்கா! அரங்கா! இவ்வுலகே உந்தன் மாய அரங்கா!!!

...சரியாக பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் குடந்தையில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் நின்ற கோலத்தில் அருளும் ஒப்பிலியப்பனை தரிசிக்கையில் என்னுள் ஒரு பரவசம் கிளர்ந்ததைத்தான் என் ஆன்மீகப் பயணத்தின் முதற் தடமாய் கூறுவேன். இருந்தபோதிலும், பாம்பணை மீது துயிலும் பரமன் ஏனோ எனை ஈர்க்கின்றான். சில பாடல்கள் நான் மனனம் செய்திருக்கின்றேன். ஆயின் சில பாடல்களில்தான் நான் ஜனனம் அடைகிறேன். அதில் ஒன்று.. பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!!! என் புற,அகக் கண்களின் நாவிற்கு அரங்கனின் சயன கோலங்களின் சுவை பிடித்துப் போனதால், என் சுவையை உங்களுடன் பகர்கிறேன். திருமழிசை ஆழ்வார். சாரங்கா!!! சாரங்கா!!! ... மீண்டும் அதே குடந்தை. சாதாரத் தெருவில் உள்ளது திருமழிசை ஆழ்வார் சன்னதி எனும் அத்துணை ஆழ்வார்களின் கருப்பை. அது இருஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் ஆன்ம அதிர்வுகள் கொண்டு சொல்கிறது திருமழிசை பிரானின் இருப்பை. முதலில் அவர் சன்னதியில் அவரை தியானித்து, வணங்கினேன். இறையை அடைய எத்துணை வழிகள் உண்டோ அத்துணை வழிகளிலும் முயன்றவர் திருமழிசை, அவை அனைத்தும் அத் துணை வழிகள்தான் என்றுணர்ந்தது அரங்கனிடம். அந்த அரங்கனின் இடங்களில் ஒன்றுதான் சாரங்கபாணி திருக் கோவில். தன் பரம பக்தன் தனை வணங்க வருவது கண்டு நீள் துயில் கொண்டோன் சற்றே எழுந்த நிலையில் அருளும் அழகில்தான் நான் கரைகிறேன். கோவிலுள் இருக்கும் கல் தேரின் சிற்பத் திறமையை வியப்பதா, இல்லை பதி தாண்டா பத்தினியாய் மணவாளனை தன் முந்தானையில் முடிந்து எப்போதும் முதல் மரியாதை பெறும் ராதாவை, கோமள வள்ளியை வியப்பதா என நான் வியந்தேன். மிகச் சுத்தமாய் பராமரிக்கப்படும் பெரும் கோயில். மிக மிக அழகான அரங்கன்.. இல்லையில்லை, சாரங்கன். ரங்கனைத் தொடர்வோம்...