வெள்ளி, ஏப்ரல் 27, 2012

கொல்லிமலை கோரக்கர் குகை

கொல்லி மலை அறப்பளீஸ்வரர் கோவில் எதிரில் ஆகாய கங்கை அருவிக்குச் செல்லும் வழியில் கீழிறங்கிச் செல்லும்போது அருவிக்கு முன்பே வலது புறம் ஓர் ஒற்றையடிப் பாதை பிரிகிறது.அதில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர பணயம்.. (எழுத்துப் பிழை இல்லைங்க). குழுவாகத்தான் செல்ல முடியும்.வழிகாட்டி துணையின்றி செல்ல முடியாது. இளம் காடு.பல வண்ணச் சருகுகள் காலடியில் மெத்தென்ற தரை விரிப்பைப் போன்று. ஏற்ற இறக்கப் பாதை.. இலக்கின்றி பாயும் காட்டாறு. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தால் முதலில் வருவது, பாம்பாட்டிச் சித்தர் குகை. தரிசித்து விட்டு நடக்கையில் திடீரென தோள்பட்டையில் நெருப்பு துண்டத்தைக் கொட்டியது போல் எரிச்சல்.மரக் கிளைகளில் படர்ந்த கொடியில் இருந்து கொத்துக் கொத்தாய் விழுந்த செந்நிற எறும்புகள்தாம் காரணம் என அறிந்தோம். அவற்றின் பெயரே நெருப்பெறும்பு எனத் தெரிந்ததும் வியப்பு .தளர் நடையிட்டுத் தொடர்ந்தோம். அமானுடச் சூழலில் கோரக்கர் குகை, அருகில் கீழிறங்கிச் சென்று காட்டாற்றில் குளித்தோம். கோடையிலும் குளிர் நீர். எதிரே பிரம்மாண்ட ஒற்றை மலை.சித்தன் போக்கு சிவன் போக்கு என்பர்.இயற்கையுடன் போரிடாது இயைந்து வாழ் சித்தர் திருவடியை நினைந்து ,பணிந்து விடை பெற்றோம்.