செவ்வாய், செப்டம்பர் 11, 2012

அரங்கா! அரங்கா! இவ்வுலகே உந்தன் மாய அரங்கா!!!

...சரியாக பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் குடந்தையில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் நின்ற கோலத்தில் அருளும் ஒப்பிலியப்பனை தரிசிக்கையில் என்னுள் ஒரு பரவசம் கிளர்ந்ததைத்தான் என் ஆன்மீகப் பயணத்தின் முதற் தடமாய் கூறுவேன். இருந்தபோதிலும், பாம்பணை மீது துயிலும் பரமன் ஏனோ எனை ஈர்க்கின்றான். சில பாடல்கள் நான் மனனம் செய்திருக்கின்றேன். ஆயின் சில பாடல்களில்தான் நான் ஜனனம் அடைகிறேன். அதில் ஒன்று.. பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!!! என் புற,அகக் கண்களின் நாவிற்கு அரங்கனின் சயன கோலங்களின் சுவை பிடித்துப் போனதால், என் சுவையை உங்களுடன் பகர்கிறேன். திருமழிசை ஆழ்வார். சாரங்கா!!! சாரங்கா!!! ... மீண்டும் அதே குடந்தை. சாதாரத் தெருவில் உள்ளது திருமழிசை ஆழ்வார் சன்னதி எனும் அத்துணை ஆழ்வார்களின் கருப்பை. அது இருஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் ஆன்ம அதிர்வுகள் கொண்டு சொல்கிறது திருமழிசை பிரானின் இருப்பை. முதலில் அவர் சன்னதியில் அவரை தியானித்து, வணங்கினேன். இறையை அடைய எத்துணை வழிகள் உண்டோ அத்துணை வழிகளிலும் முயன்றவர் திருமழிசை, அவை அனைத்தும் அத் துணை வழிகள்தான் என்றுணர்ந்தது அரங்கனிடம். அந்த அரங்கனின் இடங்களில் ஒன்றுதான் சாரங்கபாணி திருக் கோவில். தன் பரம பக்தன் தனை வணங்க வருவது கண்டு நீள் துயில் கொண்டோன் சற்றே எழுந்த நிலையில் அருளும் அழகில்தான் நான் கரைகிறேன். கோவிலுள் இருக்கும் கல் தேரின் சிற்பத் திறமையை வியப்பதா, இல்லை பதி தாண்டா பத்தினியாய் மணவாளனை தன் முந்தானையில் முடிந்து எப்போதும் முதல் மரியாதை பெறும் ராதாவை, கோமள வள்ளியை வியப்பதா என நான் வியந்தேன். மிகச் சுத்தமாய் பராமரிக்கப்படும் பெரும் கோயில். மிக மிக அழகான அரங்கன்.. இல்லையில்லை, சாரங்கன். ரங்கனைத் தொடர்வோம்...

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

கொல்லிமலை கோரக்கர் குகை

கொல்லி மலை அறப்பளீஸ்வரர் கோவில் எதிரில் ஆகாய கங்கை அருவிக்குச் செல்லும் வழியில் கீழிறங்கிச் செல்லும்போது அருவிக்கு முன்பே வலது புறம் ஓர் ஒற்றையடிப் பாதை பிரிகிறது.அதில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர பணயம்.. (எழுத்துப் பிழை இல்லைங்க). குழுவாகத்தான் செல்ல முடியும்.வழிகாட்டி துணையின்றி செல்ல முடியாது. இளம் காடு.பல வண்ணச் சருகுகள் காலடியில் மெத்தென்ற தரை விரிப்பைப் போன்று. ஏற்ற இறக்கப் பாதை.. இலக்கின்றி பாயும் காட்டாறு. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தால் முதலில் வருவது, பாம்பாட்டிச் சித்தர் குகை. தரிசித்து விட்டு நடக்கையில் திடீரென தோள்பட்டையில் நெருப்பு துண்டத்தைக் கொட்டியது போல் எரிச்சல்.மரக் கிளைகளில் படர்ந்த கொடியில் இருந்து கொத்துக் கொத்தாய் விழுந்த செந்நிற எறும்புகள்தாம் காரணம் என அறிந்தோம். அவற்றின் பெயரே நெருப்பெறும்பு எனத் தெரிந்ததும் வியப்பு .தளர் நடையிட்டுத் தொடர்ந்தோம். அமானுடச் சூழலில் கோரக்கர் குகை, அருகில் கீழிறங்கிச் சென்று காட்டாற்றில் குளித்தோம். கோடையிலும் குளிர் நீர். எதிரே பிரம்மாண்ட ஒற்றை மலை.சித்தன் போக்கு சிவன் போக்கு என்பர்.இயற்கையுடன் போரிடாது இயைந்து வாழ் சித்தர் திருவடியை நினைந்து ,பணிந்து விடை பெற்றோம்.