பொதிகை மலை....
பொதிகை மலை பற்றி பல சுவாரஸ்யமான, அமானுஷ்யமான தகவல்கள் கேள்விப்பட்டதும் அங்கு செல்லத் துடித்தோம்.
பொதிகை மலை பயணத்திற்கு தமிழக வனப்பகுதி (அம்பாசமுத்திரம்-பாபநாசம்) கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதி மறுப்பதை அறிந்து, (கேரளா) திருவனந்தபுர வனத் துறையினரின் சிறப்பு அனுமதியில் முப்பது நபர்கள் அடங்கிய குழுவாக யாத்திரையை துவக்கினோம். மற்றவர்கள் இந்த பயணத்தில்தான் பழக்கம். நான்கு உள்ளூர் இளைஞர்கள் எங்கள் வழிகாட்டியாக உடன் வர, சுமார் இருபது கி.மீ. தூர காட்டு வழி பயணத்தை தொடங்கினோம். ஆரம்பமே திகிலூட்டியது. நண்பகல் நேரம், மாலை வேளை போல் உணர்ந்தோம். அடர்ந்த வனப்பகுதி. உடன் வந்தவர்களில் சிலருக்கு காலிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்து அதிர்ந்தோம். எங்கள் வழிகாட்டி சொல்லித்தான் தெரிந்தது, காட்டு அட்டைகள்தான் காரணமென்று. அட்டைப் பூச்சிகள் காலில் ஒட்டுவதும் தெரியாது. இரத்தம் உறிகையில் வலியும் தெரியாது. மிக கவனமாக இருந்தும் ஒவ்வொருவருமே ஓரிரண்டு தடவையாவது அட்டை பூச்சிகளுக்கு இரத்த தானம் செய்தோம். கண்டிராத விருட்சங்கள், கேட்டிராத பல்லுயிர் ஒலிகள், இதுவரை அனுபவிக்காத தென்றல் என அப்பிரதேசமே இது “வனம், வனம் “ என்றது. அதே நேரம் அவ்விடம் யானைகள்,மற்றும் புலிகளின் வசிப்பிடம் என்பது ஆரம்பத்திலேயே அறிவுறுத்தப்பட்டு, அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்ற வனத் துறையினர் அறிவுரை, மனது எங்கும், எதிலும் “கவனம், கவனம்” என்றது. எனினும் பல்லாயிரம் மரங்கள், அருவிகள், ஓடைகள், என இயற்கையின் பிரம்மாண்டத்தில் கரைந்தோம். சற்று நடந்தவுடன் தென்பட்ட அருவியில் ஆனந்தக் குளியல் போட்டோம். உண்டோம்.நடந்தோம், மீண்டும் ஓர் அருவியில் குளித்தோம். ஐந்து மணி நேர நடையில், நடுக் காட்டில் அகத்தியர் கூடம் எனும் இடத்தை அடைந்து இளைப்பாறினோம்.
அங்கிருந்து பொதிகை மலையின் முழு அழகை தரிசிக்கலாம். மலை என்ற வார்த்தையின் இன்னொரு பொருள் திகைப்பு. அப்படித்தான் மலைத்துப் போனோம். பொதிகை மலையைப் பார்த்து.மலை உச்சியை வெண் பஞ்சு மேகங்கள் தழுவுவதும், பின்பு நழுவுவதுமாய் இயற்கையின் காதல் விளையாட்டு கண்டோம். பொதிகை, தாமிரவருணி ஆற்றின் தாய் மடி. இங்கு வந்தால் பறந்திடும் நோய்,நொடி. பொதிகையை கண்களால் விழுங்கி கொண்டேயிருந்தோம். இரவு கடந்தது. தங்கினோம், தூங்கினோம்.
மறுநாள் காலை ஏழு மணிக்கு மீண்டும் நடக்கத் துவங்கினோம். அடர் மூங்கில் வனம். யானைகளின் இருப்பை அவற்றின் கழிவுகளை வழியெங்கும் பார்த்தும் நாங்கள் அஞ்சவில்லை, இறை எனும் இயற்கையிடம் எங்களை முழுமையாய் ஒப்படைத்ததால்.பிறகு சர்ப வனம். (அட,பாம்பு காடுங்க). மூன்று மணி நேர நடை. பொதிகையின் உச்சிக்கு செல்வது மிக சிரமம். உச்சத்தை தொட, உதவி, ஆர்வம்,சாகசம் ,நம்பிக்கை, மரண பயம், என கலந்து கட்டி வரும் உணர்வுகளுடன், செயல்களுடன்தான் எவரும் சிகரத்தினை அடைய முடியும். தரையின் வாழ்விலக்கணமே மலையிலும்.
பொதிகை மலை உச்சி. அகத்தியர் இருக்கிறார். இறை எனும் இயற்கை தன் பெரும் கருணையினால் நமை இன்னும் வாழ வைக்கிறது.அகத்தே இயல்பாய் இருப்போம். அகத்தே இயல்பாய் இருத்தலே அகத்தியம்.